- தாழிசை
- திருச்சிற்றம்பலம்
- குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
- கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
- துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
- தோற்றத்தைப் பாடி அடியுங்கடி.
- மாமயில் ஏறி வருவாண்டி - அன்பர்
- வாழ்த்த வரங்கள் தருவாண்டி
- தீமையி லாத புகழாண்டி - அவன்
- சீர்த்தியைப் பாடி அடியுங்கடி.
- பன்னிரு தோள்கள் உடையாண்டி - கொடும்
- பாவிகள் தம்மை அடையாண்டி
- என்னிரு கண்கள் அனையாண்டி - அவன்
- ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி.
- வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த
- வேடர் தமைஎலாம் வென்றாண்டி
- தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத்
- தீரனைப் பாடி அடியுங்கடி.
- சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
- செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
- கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங்
- கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
- ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
- டாறு புயந்திகழ் அற்புதமும்
- வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
- மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.
- ஆனந்த மான அமுதனடி - பர
- மானந்த நாட்டுக் கரசனடி
- தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
- சண்முகன் நங்குரு சாமியடி.
- வேதமுடி சொல்லும் நாதனடி - சதுர்
- வேதமு டிதிகழ் பாதனடி
- நாத வடிவுகொள் நீதனடி - பர
- நாதங் கடந்த நலத்தனடி.
- தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர
- தத்துவம் அன்றித் துடங்காண்டி
- சத்துவ ஞான வடிவாண்டி - சிவ
- சண்முக நாதனைப் பாடுங்கடி.
- சச்சிதா னந்த உருவாண்டி - பர
- தற்பர போகந் தருவாண்டி
- உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
- உத்தம தேவனைப் பாடுங்கடி.
- அற்புத மான அழகனடி - துதி
- அன்பர்க் கருள்செய் குழகனடி
- சிற்பர யோகத் திறத்தனடி-அந்தச்
- சேவகன் சீர்த்தியைப் பாடுங்கடி.
- சைவந் தழைக்கத் தழைத்தாண்டி -ஞான
- சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி
- பொய்வந்த உள்ளத்தில் போகாண்டி - அந்தப்
- புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி.
- வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு
- வாசியில் இங்கே வருவாண்டி
- ஆசில் கருணை உருவாண்டி - அவன்
- அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி.
- இராப்பகல் இல்லா இடத்தாண்டி - அன்பர்
- இன்ப உளங்கொள் நடத்தாண்டி
- அராப்பளி ஈந்த திடத்தாண்டி - அந்த
- அண்ணலைப் பாடி அடியுங்கடி.
- ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
- ஒன்றிரண் டாகா அளவாண்டி
- மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
- மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.