- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகரே
- வள்ளி மணாளரே வாரும்
- புள்ளி மயிலோரே வாரும்.
- சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
- சண்முக நாதரே வாரும்
- உண்மை வினோதரே வாரும்.
- பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
- பொன்னான வேலரே வாரும்
- மின்னார்முந் நூலரே வாரும்.
- காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
- கண்ணுதல் சேயரே வாரும்
- ஒண்ணுதல் நேயரே வாரும்.
- செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
- செங்கல்வ ராயரே வாரும்
- எங்குரு நாதரே வாரும்.
- அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
- ஆறுமுகத் தோரே வாரும்
- மாறில்அகத் தோரே வாரும்.
- சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
- சூரசங் காரரே வாரும்
- வீரசிங் காரரே வாரும் .
- வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
- வேலாயுதத் தோரே வாரும்
- காலாயுதத் தோரே வாரும்.
- சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
- தேவர்கள் தேவரே வாரும்
- மூவர் முதல்வரே வாரும்.
- பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
- பன்னிரு தோளரே வாரும்
- பொன்மலர்த் தாளரே வாரும்.
- மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
- மாமயில் வீரரே வாரும்
- தீமையில் தீரரே வாரும்.
- தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
- சுப்பிர மணியரே வாரும்
- வைப்பின் அணியரே வாரும்.