- கலி விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா
- கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப்
- பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ
- பெய்விடம் அனையஎன் பிழைபொ றுக்கவே.
- பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே
- வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
- மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின்
- சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.
- செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப்
- புல்லலும் கொண்டஎன் பொய்மை கண்டுநீ
- கொல்லலும் தகும்எனைக் கொன்றி டாதருள்
- மல்லலும் தகும்சடா மகுட வள்ளலே.
- வள்ளலே நின்அடி மலரை நண்ணிய
- உள்ளலேன் பொய்மையை உன்னி என்னையாட்
- கொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை
- எள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே.
- செய்யநன் றறிகிலாச் சிறிய னேன்தனைப்
- பொய்யன்என் றெண்ணிநீ புறம்பொ ழிப்பையேல்
- வையநின் றையவோ மயங்கல் அன்றியான்
- உய்யநின் றுணர்குவ தொன்றும் இல்லையே.
- வேறு
- இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
- தில்லை மன்றில் சிவபரஞ் சோதியே
- வல்லை யான்செயும் வஞ்சமெ லாம்பொறுத்
- தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.
- வேறு
- இல்லையே என்பதிங் கில்லை என்றருள்
- நல்லையே நீஅருள் நயந்து நல்கினால்
- கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம்
- ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே.
- உண்மையே அறிகிலா ஒதிய னேன்படும்
- எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை
- அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ
- வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ.
- அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன்
- சொல்லலங் கடல்விடைத் தோன்றல் நின்அருள்
- மல்லலங் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால்
- கல்அலங் கடல்மனம் கனிதல் மெய்மையே.
- மெய்மையே அறிகிலா வீண னேன்இவன்
- உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக்
- கைமையே அனையர்தம் கடையில் செல்லவும்
- பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ.
- என்னுடை வஞ்சக இயற்கை யாவையும்
- பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின்
- தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான்
- நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே.
- நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
- திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
- அகழுமால் ஏன்மாய் அளவும் செம்மலர்ப்
- புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே.