- கோயில்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
- சுயம்பிர காசமே அமுதில்
- கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
- கடவுளே கண்ணுதற் கரும்பே
- குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
- கொடுந்துய ரால்அலைந் தையா
- முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
- மூடன்என் றிகழ்வது முறையோ.
- இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி
- ஏன்றுகொள் பவரிலை அந்தோ
- அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும்
- அஞரெலாம் அறுத்தருள் புரிவாய்
- புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளிப்
- பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
- திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே
- செல்வமே சிவபரம் பொருளே.
- பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
- புத்தமு தேகுணப் பொருப்பே
- இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
- இன்பமே என்பெருந் துணையே
- அருள்எலாம் திரண்ட ஒருசிவ மூர்த்தி
- அண்ணலே நின்அடிக் கபயம்
- மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
- மயக்கெலாம் மாற்றிஆண் டருளே.
- ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
- றணுத்துணைத் திவலையே எனினும்
- ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
- இல்லையேல் என்செய்கேன் எளியேன்
- நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
- நினைப்பரும் நிலைமையை அன்பர்
- வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
- விமலனே விடைப்பெரு மானே.
- பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
- பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
- அருமையில் பிரமன் ஆதிய தேவர்
- அடைந்தநற் செல்வமே அமுதே
- இருமையிற் பயனும் நின்திரு அருளே
- என்றுநின் அடைக்கலம் ஆனேன்
- கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
- களைகளைந் தெனைவிளைத் தருளே.
- விளைத்தனன் பவநோய்க் கேதுவாம் விடய
- விருப்பினை நெருப்புறழ் துன்பின்
- இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால்
- என்செய்கேன் என்பிழை பொறுத்துத்
- தளைத்தவன் துயர்நீத் தாளவல் லவர்நின்
- தனைஅன்றி அறிந்திலன் தமியேன்
- கிளைத்தவான் கங்கை நதிச்சடை யவனே
- கிளர்தரும் சிற்பர சிவனே.
- சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்
- தேவனே தில்லைஅம் பலத்தே
- தற்பர நடஞ்செய் தாணுவே அகில
- சராசர காரணப் பொருளே
- அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்
- அலைதரு கின்றனன் எளியேன்
- கற்பகம் அனையநின் திருவருட் கடலில்
- களிப்புடன் ஆடுவ தென்றோ.
- என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள்
- என்றுநின் உருவுகண் டிடும்நாள்
- என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்
- என்றென தகத்துயர் அறும்நாள்
- மன்றுள்நின் றாடும் பரஞ்சுடர்க் குன்றே
- வானவர் கனவினும் தோன்றா
- தொன்றுறும் ஒன்றே அருண்மய மான
- உத்தம வித்தக மணியே.
- வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப
- விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ
- அத்தக வேனை எடுப்பவர் நின்னை
- அன்றிஎங் கணும்இலை ஐயா
- மத்தகக் கரியின் உரிபுனை பவள
- வண்ணனே விண்ணவர் அரசே
- புத்தக நிறைவின் அடியவர் வேண்டும்
- பொருள்எலாம் புரிந்தருள் பவனே.
- அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
- அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
- மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
- வானமும் தேடினும் இன்றே
- இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
- இணைதுணை எனநினைந் துற்றேன்
- மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
- வாழிய அருட்பெருந் துறையே.