- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
- செம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல்
- கூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த
- குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
- பேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை
- பிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப்
- பார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன்
- பாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே.
- தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
- தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
- பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
- பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
- ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
- திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
- சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
- தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.
- தெளிக்குமறைப் பொருளேஎன் அன்பே என்றன்
- செல்வமே திருத்தணிகைத் தேவே அன்பர்
- களிக்கும்மறைக் கருத்தேமெய்ஞ் ஞான நீதிக்
- கடவுளே நின்அருளைக் காணேன் இன்னும்
- சுளிக்கும்மிடித் துயரும்யமன் கயிறும் ஈனத்
- தொடர்பும்மலத் தடர்பும்மனச் சோர்வும் அந்தோ
- அளிக்கும்எனை என்செயுமோ அறியேன் நின்றன்
- அடித்துணையே உறுதுணைமற் றன்றி உண்டோ.
- உண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க
- ஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்
- கண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை
- காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய்
- தண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால்
- தருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே
- விண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி
- வித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே.
- கையாத அன்புடையார் அங்கை மேவும்
- கனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்
- பொய்யாத பூரணமே தணிகை ஞானப்
- பொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்
- உய்யாத குறைஉண்டோ துயர்சொல் லாமல்
- ஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்
- ஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்
- கார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே.
- வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்
- வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
- நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி
- நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்
- தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்
- என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே
- து‘ய்க்குமர குருவேதென் தணிகை மேவும்
- சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே.
- ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
- ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
- கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
- கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
- நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
- நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
- தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
- சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே.
- வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான
- வாரிதியே தணிகைமலை வள்ள லேயான்
- பாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்
- பதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே
- தாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்
- தயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்
- ஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ
- அச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்.
- அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்
- ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்
- புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்
- புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்
- பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்
- படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
- எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
- இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே.
- கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான
- குலமணியே குகனேசற் குருவே யார்க்கும்
- தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
- சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்
- பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்
- போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்
- சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்
- செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே.