- திருவலிதாயம்
- கலிவிருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திரைப டாதசெ ழுங்கட லேசற்றும்
- உரைப டாமல்ஒ ளிசெய்பொன் னேபுகழ்
- வரைப டாதுவ ளர்வல்லி கேசநீ
- தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ.
- சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே
- எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே
- தந்தை யேவலி தாயத்த லைவநீ
- கந்தை சுற்றும்க ணக்கது என்கொலோ.
- வேலை கொண்ட விடம்உண்ட கண்டனே
- மாலை கொண்ட வளர்வல்லி கேசனே
- பாலை கொண்ட பராபர நீபழஞ்
- சேலை கொண்ட திறம்இது என்கொலோ.
- பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே
- மன்னும் மாமணி யேவல்லி கேசனே
- உன்ன நீஇங்கு டுத்திய கந்தையைத்
- துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே.
- கடுத்த தும்பிய கண்டஅ கண்டனே
- மடுத்த நற்புகழ் வாழ்வல்லி கேசநீ
- தொடுத்த கந்தையை நீக்கித்து ணிந்தொன்றை
- உடுத்து வார்இலை யோஇவ்வு லகிலே.
- ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு
- மால்அ டுத்தும கிழ்வல்லி கேசநீ
- பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத்
- தோல்உ டுப்பது வேமிகத் தூய்மையே.
- துன்னும் மாமருந் தேசுட ரேஅருள்
- மன்னும் மாணிக்க மேவல்லி கேசரே
- துன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில்
- என்ன நீர்எமக் கீயும்ப ரிசதே.
- மாசில் சோதிம ணிவிளக் கேமறை
- வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர்
- தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர
- தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே.
- தேரும் நற்றவர் சிந்தைஎ னுந்தலம்
- சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர்
- பாரும் மற்றிப்ப ழங்கந்தை சாத்தினீர்
- யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே.
- மெல்லி தாயவி ரைமலர்ப் பாதனே
- வல்லி தாயம ருவிய நாதனே
- புல்லி தாயஇக் கந்தையைப் போர்த்தினால்
- கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே.