- திருமுல்லைவாயில்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- தேன்என இனிக்கும் திருவருட் கடலே
- தெள்ளிய அமுதமே சிவமே
- வான்என நிற்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
- உன்திருக் கோயில்வந் தடைந்தால்
- ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
- ஈதுநின் திருவருட் கியல்போ.
- பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
- புத்தமு தேமறைப் பொருளே
- வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- தீங்கொடி யாத வினையனேன் எனினும்
- செல்வநின் கோயில்வந் தடைந்தால்
- ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
- ஏன்எனா திருப்பதும் இயல்போ.
- துப்புநேர் இதழி மகிழ்ந்தகல் யாண
- சுந்தரா சுந்தரன் தூதா
- மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
- அறிவிலேன் எனினுநின் கோயிற்
- கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- கங்கைஅஞ் சடைகொண் டோங்குசெங் கனியே
- கண்கள்மூன் றோங்குசெங் கரும்பே
- மங்கல்இல் லாத வண்மையே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும்
- தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
- எங்குவந் தாய்நீ யார்என வேனும்
- இயம்பிடா திருப்பதும் இயல்போ.
- நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும்
- நல்லவ னேதிருத் தில்லை
- மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும்
- தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
- என்றுவந் தாய்என் றொருசொலும் சொல்லா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
- பத்தர்கட் கருள்செயும் பரமே
- மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
- பெருமநின் அருள்பெற லாம்என்
- றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
- முக்கணா மூவர்க்கும் முதல்வா
- மன்னிய கருணை வாரியே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
- அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
- என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
- ஞானநா டகம்புரி நலமே
- வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
- பொய்யல உலகறிந் ததுநீ
- இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
- புண்ணியம் விளைகின்ற புலமே
- மதுவினின் றோங்கும் பொழில்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
- பூங்கழற் கன்புபூண் டவன்காண்
- எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
- புண்ணியா கண்ணுதல் கரும்பே
- மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
- உன்திரு அடித்துணை அறிய
- என்னைஈன் றவனே முகமறி யார்போல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.