- கலிவிருத்தம்
- திருசிற்றம்பலம்
- தாயின் மேவிய தற்பர மேமுல்லை
- வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
- கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
- தேயின் மேவி இருந்தனன் என்னையே.
- தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு
- முல்லை வாயில் முதல்சிவ மூர்த்தியே
- தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
- எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே.
- வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
- குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
- உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
- களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.
- மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
- விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
- குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
- தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே.
- சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
- ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
- தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
- ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே.
- சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
- பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
- மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
- கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.
- வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
- அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
- கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
- நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.
- மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
- கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை
- எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
- பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே.
- தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
- கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
- வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
- ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ.
- தேசு லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
- மாசி லாமணி யேமருந் தேசற்றும்
- கூசி டாமல்நின் கோயில்வந் துன்புகழ்
- பேசி டாத பிழைபொறுத் தாள்வையே.