- திருவொற்றியூர்
- கொச்சகக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
- இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
- முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
- என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ.
- தோன்றாத் துணையாகும் சோதியே நின்அடிக்கே
- ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும்
- ஊன்றார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
- தேன்றார்ச் சடையாய்உன் சித்தம் இரங்காதோ.
- காதார் கடுவிழியார் காமவலைக் குள்ளாகி
- ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
- போதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன்
- நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.
- இலைவேட்ட மாதர்தம தீனநல மேவிழைந்து
- கொலைவேட் டுழலும் கொடியனேன் ஆயிடினும்
- நிலைவேட்ட நின்அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
- கலைவேட்ட வேணியனே கருணைசற்றும் கொண்டிலையே.
- கொண்டல்நிறத் தோனும் குணிக்கரிய நின்அடிக்கே
- தொண்டறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும்
- எண்டகநின் பொன்அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன்
- தண்டலைசூழ் ஒற்றியுளாய் தயவுசற்றும் சார்ந்திலையே.
- சாரா வறுஞ்சார்பில் சார்ந்தரைசே உன்னுடைய
- தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன் ஆயிடினும்
- நேராய்நின் சந்நிதிக்கண் நின்றுநின்று வாடுகின்றேன்
- ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.
- ஊர்மதிக்க வீணில் உளறுகின்ற தல்லதுநின்
- சீர்மதிக்க நின்அடியைத் தேர்ந்தேத்தேன் ஆயிடினும்
- கார்மதிக்கும் நஞ்சம்உண்ட கண்டநினைந் துள்குகின்றேன்
- ஏர்மதிக்கும் ஒற்றியூர் எந்தைஅளி எய்தாயோ.
- தாய்க்கும்இனி தாகும்உன்தன் தாள்மலரை ஏத்தாது
- நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
- வாய்க்கும்உன்தன் சந்திதிக்கண் வந்துவந்து வாடுகின்றேன்
- தூய்க்குமரன் தந்தாய்என் சோர்வறிந்து தீராயோ.
- அறியாப் பருவத் தடியேனை ஆட்கொண்ட
- நெறியாம் கருணை நினைந்துருகேன் ஆயிடினும்
- குறியாப் பொருளேஉன் கோயிலிடை வந்துநின்றும்
- பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே.
- பார்நடையாம் கானில் பரிந்துழல்வ தல்லதுநின்
- சீர்நடையாம் நன்னெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
- நேர்நடையாம் நின்கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
- வார்நடையார் காணா வளர்ஒற்றி மன்அமுதே.