- திருவொற்றியூர்
- கொச்சகக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
- முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
- நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
- எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்
- பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
- முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
- எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.
- நன்னெறிசேர் அன்பர்தமை நாடிடவும் நின்புகழின்
- சென்னெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்குனக்கு
- முன்அறியேன் பின்அறியேன் மூடனேன் கைம்மாறிங்
- கென்அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மைப்படியும் கண்ணார் மயல்உழக்கச் செய்வாயோ
- கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ
- இப்படிஎன் றப்படிஎன் றென்னறிவேன் உன்சித்தம்
- எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும்
- பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
- சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல்
- எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.
- தீதறிவேன் நன்கணுவும் செய்யேன்வீண் நாள்போக்கும்
- வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்
- சூதறிவேன் மால்அயனும் சொல்லறிய நின்பெருமை
- யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
- கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
- ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
- ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து
- புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
- கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க
- எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர்தம்
- வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
- கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
- என்செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம்
- கொங்குடைய கொன்றைக் குளிர்சடையாய் கோதைஒரு
- பங்குடையாய் ஏழைமுகம் பாராது தள்ளிவிட்டால்
- எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே
- வென்றிமழுக் கையுடைய வித்தகனே என்றென்று
- கன்றின் அயர்ந்தழும்என் கண்ர் துடைத்தருள
- என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே.
- மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
- தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
- சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
- என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே.
- மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
- தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
- பொன்போல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
- என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.
- பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
- தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான்
- காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்மூடி
- ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- பன்னரும்இப் பார்நடையில் பாடுழன்ற பாதகனேன்
- துன்னியநின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்
- புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே
- என்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே.
- வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
- தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
- பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
- ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே.
- பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்
- துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
- நின்னருள்நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
- இன்னும்அறி யாயோ எழுத்தறியும் பெருமானே.
- கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்
- புல்லை மதித் தையோபைம் பூஇழந்த பொய்யடியேன்
- ஒல்லைபடு கின்ற ஒறுவே தனைதனக்கோர்
- எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே.
- பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத
- கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
- இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய்
- என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.
- மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்
- ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்
- கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்
- ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்
- சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல்
- நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியீ தல்லஎன்றே
- யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
- ஊக்கமிலா நெஞ்சத்தின் ஓட்டகலச் செய்வாயேல்
- தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர்
- ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
- ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
- பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்அருளை
- ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.
- ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன்இவன்
- பீழைமனம் நம்மைப் பெறாதம் மனங்கொடிய
- தாழைஎன எண்ணிஎன்னைத் தள்ளிவிட்டால் என்செய்வேன்
- ஏழைநான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம்
- கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த
- தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி
- எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
- கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
- உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற்
- றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.
- பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
- நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
- உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வௌர்க்கும்
- எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
- அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
- இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
- எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்
- வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீறும்அழுக் காறுசினம்
- கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்
- இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே.
- ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
- அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
- சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
- இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய்
- மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே
- இனையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே
- எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.