- திருவொற்றியூர்
- கலிவிருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
- பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்
- மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
- துக்க மியாவையும் தூர ஓடுமே.
- ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டிநீ
- நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள்
- பாடும் எம்படம் பக்க நாதன்தாள்
- நாடு நாடிடில் நாடு நம்மதே.
- நம்பு நெஞ்சமே நன்மை எய்துமால்
- அம்பு யன்புகழ் அண்ணல் ஒற்றியூர்ப்
- பம்பு சீர்ப்படம் பக்கன் ஒன்னலார்
- தம்பு ரஞ்சுடும் தம்பி ரானையே.
- தம்ப லம்பெறும் தைய லார்கணால்
- வெம்ப லந்தரும் வெய்ய நெஞ்சமே
- அம்ப லத்தினில் அமுதை ஒற்றியூர்ச்
- செம்ப லத்தைநீ சிந்தை செய்வையே.
- செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
- உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
- மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
- பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.
- வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர்
- ஆண்டு நின்றருள் அரசின் பொற்பதம்
- பூண்டு கொண்டுளே போற்றி நிற்பையேல்
- யாண்டும் துன்பம்நீ அடைதல் இல்லையே.
- இல்லை உண்டென எய்தி ஐயுறும்
- கல்லை யொத்தஎன் கன்ம நெஞ்சமே
- ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
- நல்லை நல்லைநீ நட்பின் மேலையே.
- மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
- ஓலை காட்டுமுன் ஒற்றி யூரில்வாழ்
- பாலை சேர்படம் பக்க நாதர்தம்
- காலை நாடிநற் கதியின் நிற்பையே.
- நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே
- அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே
- சிற்ப ரன்திருத் தில்லை அம்பலப்
- பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.
- போற்றி ஒற்றியூர்ப் புண்ணி யன்திரு
- நீற்றி னான்தனை நினைந்து நிற்பையேல்
- தோற்ற ரும்பரஞ் சோதி நல்அருள்
- ஊற்றெ ழும்கடல் ஒக்க நெஞ்சமே.