- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
- பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
- கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
- காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
- விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
- விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
- தண்ஏறு பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப்
- பாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று
- கொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம்
- குறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக்
- கண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்தாய்
- கைவிடேல் உன்ஆணை காண்முக் காலும்
- தண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- புன்புலைய வஞ்சகர்பால் சென்று வீணே
- புகழ்ந்துமனம் அயர்ந்துறுகண் பொருந்திப் பொய்யாம்
- வன்புலைய வயிறோம்பிப் பிறவி நோய்க்கு
- மருந்தாய நின்அடியை மறந்தேன் அந்தோ
- இன்புலைய உயிர்கொள்வான் வரில்என் பால்அவ்
- வியமனுக்கிங் கென்சொல்கேன் என்செய் கேனே
- தன்புகழ்காண் அருந்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பெருங்களப முலைமடவார் என்னும் பொல்லாப்
- பேய்க்கோட்பட் டாடுகின்ற பித்த னேனுக்
- கிரும்புலவர்க் கரியதிரு அருள்ஈ வாயேல்
- என்சொலார்4 அடியர்அதற் கெந்தாய் எந்தாய்
- கரும்பின்இழிந் தொழுகும்அருள் சுவையே முக்கண்
- கனிகனிந்த தேனேஎன் கண்ணே ஞானம்
- தரும்புனிதர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கல்அளவாம் நெஞ்சம்என வஞ்ச மாதர்
- கண்மாயம் எனும்கயிற்றால் கட்டு வித்துச்
- சொல்அளவாத் துன்பம்எனும் கடலில் வீழ்த்தச்
- சோர்கின்றேன் அந்தோநல் துணைஓன் றில்லேன்
- மல்அளவாய்ப் பவம்மாய்க்கும் மருந்தாம் உன்றன்
- மலர்ப்பாதப் புணைதந்தால் மயங்கேன் எந்தாய்
- சல்லம்5 உலாத் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- அன்னைமுத லாம்பந்தத் தழுங்கி நாளும்
- அலைந்துவயி றோம்பிமனம் அயர்ந்து நாயேன்
- முன்னைவினை யாற்படும்பா டெல்லாம் சொல்லி
- முடியேன்செய் பிழைகருதி முனியேல் ஐயா
- பொன்னைநிகர் அருட்குன்றே ஒன்றே முக்கட்
- பூமணமே நறவேநற் புலவர் போற்றத்
- தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பன்னரும்வன் துயரால்நெஞ் சழிந்து நாளும்
- பதைத்துருகி நின்அருட்பால் பருகக் கிட்டா
- துன்னரும்பொய் வாழ்க்கைஎனும் கானத் திந்த
- ஊர்நகைக்கப் பாவிஅழல் உணர்ந்தி லாயோ
- என்னருமை அப்பாஎன் ஐயா என்றன்
- இன்னுயிர்க்குத் தலைவாஇங் கெவர்க்கும் தேவா
- தன்னியல்சீர் வளர்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கோவேநின் பதம்துதியா வஞ்ச நெஞ்சக்
- கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்
- சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்
- தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ
- சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற
- செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்
- தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஓயாது வரும்மிடியான் வஞ்சர் பால்சென்
- றுளங்கலங்கி நாணிஇரந் துழன்றெந் நாளும்
- மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ
- மருந்தாய நின்அடியை மறந்திட் டேனே
- தாயாகித் தந்தையாய்த் தமராய் ஞான
- சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே
- சாயாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மின்னாளும் இடைமடவார் அல்கு லாய
- வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன் அல்லால்
- எந்நாளும் உனைப்போற்றி அறியேன் என்னே
- ஏழைமதி கொண்டேன்இங் கென்செய் கேனே
- அன்னாய்என அப்பாஎன் றரற்றும் அன்பர்க்
- காரமுதே அருட்கடலே அமரர் கோவே
- தன்னார்வத் தமர்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வன்சொலினார் இடைஅடைந்து மாழ்கும் இந்த
- மாபாவி யேன்குறையை வகுத்து நாளும்
- என்சொலினும் இரங்காமல் அந்தோ வாளா
- இருக்கின்றாய் என்னேநின் இரக்கம் எந்தாய்
- இன்செல்அடி யவர்மகிழும் இன்ப மேஉள்
- இருள்அகற்றும் செழுஞ்சுடரே எவர்க்கும் கோவே
- தன்சொல்வளர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மீளாத வன்துயர்கொண் டீனர் தம்மால்
- மெலிந்துநினை அழைத்தலறி விம்மா நின்றேன்
- கேளாத கேள்விஎலாம் கேட்பிப் பாய்நீ
- கேட்கிலையோ என்அளவில் கேள்வி இன்றோ
- மாளாத தெண்டர்அக இருளை நேக்கும்
- மதியேசிற் சுகஞான மழைபெய் விண்ணே
- தாளாளர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
- வருந்திமனம் மயங்கிமிக வாடி நின்றேன்
- புண்ணியா நின்அருளை இன்னும் காணேன்
- பொறுத்துமுடி யேன்துயரம் புகல்வ தென்னே
- எண்ணினால் அளப்பரிய பெரிய மோன
- இன்பமே அன்பர்தம திதயத் தோங்கும்
- தண்ணினால் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம்
- வருந்திஉறு கண்வெயிலால் மாழாந் தந்தோ
- தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே
- தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ
- செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
- தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
- சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா
- வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ
- பாழான மடந்தையர்பால் சிந்தை வைக்கும்
- பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ
- ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
- இன்பமே என்அரசே இறையே சற்றும்
- தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உளந்தளர விழிசுருக்கும் வஞ்சர் பால்சென்
- றுத்தமநின் அடியைமறந் தோயா வெய்யில்
- இளந்தளிர்போல் நலிந்திரந்திங் குழலும் இந்த
- ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே
- வளந்தருசற் குணமலையே முக்கட் சோதி
- மணியின்இருந் தொளிர்ஒளியே மயிலூர் மன்னே
- தளந்தரும்பூம் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கல்லாத வஞ்சகர்பால் சென்று வீணாள்
- கழித்து நிற்கும் கடையன்இவன் கருணை இல்லாப்
- பொல்லாத பாவிஎன எண்ணி என்னைப்
- புறம்போக்கில் ஐயாயான் புரிவ தென்னே
- எல்லாம்செய் வல்லவனே தேவர் யார்க்கும்
- இறைவனே மயில்ஏறும் எம்பி ரானே
- சல்லாப வளத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
- கரைந்துருகி எந்தாய்நின் கருணை காணா
- தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக்
- கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ
- பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான
- பூரணமே புண்ணியமே புனித வைப்பே
- தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
- பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
- மாவல்வினை யுடன்மெலிந்திங் குழல்கின் றேன்நின்
- மலர்அடியைப் போற்றேன்என் மதிதான் என்னே
- தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
- தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
- தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
- கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே
- அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி
- அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே
- சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற
- செல்வமே என்புருக்கும் தேனே எங்கும்
- தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
- உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
- கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
- கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
- தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
- தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
- தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
- வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
- எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
- என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
- கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
- கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
- தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
- டோய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
- பார்ஆதி அண்டம்எலாம் கணத்தில் காண்போய்
- பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
- சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
- சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
- சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாஎன்பார் இன்றிஉன தன்பர் என்னை
- வஞ்சகன்என் றேமறுத்து வன்க ணாநீ
- போஎன்பார் ஆகில்எங்குப் போவேன் அந்தோ
- பொய்யனேன் துணைஇன்றிப் புலம்பு வேனே
- கோஎன்பார்க் கருள்தருமக் குன்றே ஒன்றே
- குணங்குறிஅற் றிடஅருளும் குருவே வாழ்க்கைத்
- தாஎன்பார் புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மாயைநெறி யாம்உலக வாழ்க்கை தன்னில்
- வருந்திநினை அழைத்தலறி மாழ்கா நின்றேன்
- தாயைஅறி யாதுவரும் சூல்உண் டோஎன்
- சாமிநீ அறியாயோ தயைஇல் லாயோ
- பேயைநிகர் பாவிஎன நினைந்து விட்டால்
- பேதையேன் என்செய்கேன் பெருஞ்சீர்க் குன்றே
- சாயைகடல் செறிதணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மின்னைநிகர்ந் தழிவாழ்க்கைத் துயரால் நெஞ்சம்
- மெலிந்துநின தருள்பருக வேட்டுநின்றேன்
- என்னைஇவன் பெரும்பாவி என்றே தள்ளில்
- என்செய்கேன் தான்பெறும்சேய் இயற்றும் குற்றம்
- அன்னைபொறுத் திடல்நீதி அல்ல வோஎன்
- ஐயாவே நீபொறுக்கல் ஆகா தோதான்
- தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- முந்தைவினை யால்நினது வழியில் செல்லா
- மூடனேன் தனைஅன்பர் முனிந்து பெற்ற
- தந்தைவழி நில்லாத பாவி என்றே
- தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்கு வேனே
- எந்தைநின தருள்சற்றே அளித்தால் வேறோர்
- எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன்
- சந்தனவான் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பன்னகநொந் துறுவஞ்ச உலகில் நின்று
- பரதவித்துன் அருட்கெதிர்போய்ப் பார்க்கின் றேன்நின்
- பொன்னருளைப் புணர்ந்துமன மகிழ்ந்து வாழப்
- புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ
- பின்னைஒரு துணைஅறியேன் தனியே விட்டால்
- பெருமநினக் கழகேயோ பேதை யாம்என்
- தன்னைஅளித் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- 4. சொல்வார். தொ.வே. முதற்பதிப்பு.