- திருவொற்றியூர்
- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- தோடுடை யார்புலித் தோலுடை யார்கடல் தூங்கும்ஒரு
- மாடுடை யார்மழு மான்உடை யார்பிர மன்தலையாம்
- ஓடுடை யார்ஒற்றி யூர்உடை யார்புகழ் ஓங்கியவெண்
- காடுடை யார்நெற்றிக் கண்உடை யார்எம் கடவுளரே.
- வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
- திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
- உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
- கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே.
- செல்இடிக் கும்குரல் கார்மத வேழச் சினஉரியார்
- வல்அடுக் கும்கொங்கை மாதொரு பாகர் வடப்பொன்வெற்பாம்
- வில்எடுக் கும்கையர் சாக்கியர் அன்று விரைந்தெறிந்த
- கல்லடிக் கும்கதி காட்டினர் காண்எம் கடவுளரே.
- ஏழியல் பண்பெற் றமுதோ டளாவி இலங்குதமிழ்க்
- கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்தநற்சீர்
- வீழியில் தம்பதிக் கேவிடை கேட்கவெற் பாள்உடனே
- காழியில் தன்னுருக் காட்டின ரால்எம் கடவுளரே.
- நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்
- பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே
- ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக்
- காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே.
- பைச்சூர் அரவப் படநடத் தான்அயன் பற்பலநாள்
- எய்ச்சூர் தவஞ்செய் யினும்கிடை யாப்பதம் ஏய்ந்துமண்மேல்
- வைச்சூரன் வன்தொண்டன் சுந்தரன் என்னுநம் வள்ளலுக்குக்
- கச்சூரில் சோறிரந் தூட்டின ரால்எம் கடவுளரே.
- ஏணப் பரிசெஞ் சடைமுத லானஎல் லாம்மறைத்துச்
- சேணப் பரிகள் நடத்திடு கின்றநல் சேவகன்போல்
- மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்க வாசகர்க்காய்க்
- காணப் பரிமிசை வந்தன ரால்எம் கடவுளரே.
- எல்லாம் செயவல்ல சித்தரின் மேவி எழில்மதுரை
- வல்லாரின் வல்லவர் என்றறி யாமுடி மன்னன்முன்னே
- பல்லா யிரஅண்ட மும்பயம் எய்தப் பராக்கிரமித்துக்
- கல்லானை தின்னக் கரும்பளித் தார்எம் கடவுளரே.
- மால்எடுத் தோங்கிய மால்அயன் ஆதிய வானவரும்
- ஆல்அடுத் தோங்கிய அந்தண னேஎன் றடைந்திரண்டு
- பால்எடுத் தேத்தநம் பார்ப்பதி காணப் பகர்செய்மன்றில்
- கால்எடுத் தாடும் கருத்தர்கண் டீர்எம் கடவுளரே.
- மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
- மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
- ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
- காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் பார்எம் கடவுளரே.
- 17. இரக்கமில்லீர் எம்பிரான் என நாவுக்கரசர் பாடியதாவதுஅரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரேசுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோசரக்க விக்கத வந்திறப் பிம்மினே.