- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- விண்அ றாதுவாழ் வேந்தன் ஆதியர்
- வேண்டி ஏங்கவும் விட்டென் நெஞ்சகக்
- கண்அ றாதுநீ கலந்து நிற்பதைக்
- கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
- எண்அ றாத்துயர்க் கடலுள் மூழ்கியே
- இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன்
- தண்அ ற்‘ப்பொழில் குலவும் போரி6 வாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- வாட்கண் ஏழையர் மயலில் பட்டகம்
- மயங்கி மால்அயன் வழுத்தும் நின்திருத்
- தாட்கண் நேயம்அற் றுலக வாழ்க்கையில்
- சஞ்ச ரித்துழல் வஞ்ச னேன்இடம்
- ஆட்க ணேசுழல் அந்த கன்வரில்
- அஞ்சு வேன்அலால் யாது செய்குவேன்
- நாட்க ணேர்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
- நாய காதிருத் தணிகை நாதனே.
- எண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ
- இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
- கண்ணின் உண்மணி யாய நின்தனைக்
- கருதி டாதுழல் கபட னேற்கருள்
- நண்ணி வந்திவன் ஏழை யாம்என
- நல்கி ஆண்டிடல் நியாய மேசொலாய்
- தண்இ ரும்பொழில் சூழும் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- கூவி ஏழையர் குறைகள் தீரஆட்
- கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில்
- பாவி யேன்படும் பாட னைத்தையும்
- பார்த்தி ருந்தும்நீ பரிந்து வந்திலாய்
- சேவி யேன் எனில் தள்ளல் நீதியோ
- திருவ ருட்கொரு சிந்து வல்லையோ
- தாவி ஏர்வளைப் பயில்செய் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- சந்தை நேர்நடை தன்னில் ஏங்குவேன்
- சாமி நின்திருத் தாளுக் கன்பிலேன்
- எந்தை நீமகிழ்ந் தென்னை ஆள்வையேல்
- என்னை அன்பர்கள் என்சொல் வார்களோ
- நிந்தை ஏற்பினும் கருணை செய்திடல்
- நித்த நின்அருள் நீதி ஆகுமால்
- தந்தை தாய்என வந்து சீர்தரும்
- தலைவ னேதிருத் தணிகை நாதனே.
- செல்லும் வாழ்க்கையில் தியங்க விட்டுநின்
- செய்ய தாள்துதி செய்தி டாதுழல்
- கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டுசெய்
- கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ
- சொல்லும் இன்பவான் சோதி யேஅருள்
- தோற்ற மேசுக சொருப வள்ளலே
- சல்லி யங்கெட அருள்செய் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- ஏது செய்குவ னேனும் என்றனை
- ஈன்ற நீபொறுத் திடுதல் அல்லதை
- ஈது செய்தவன் என்றிவ் வேழையை
- எந்த வண்ணம்நீ எண்ணி நீக்குவாய்
- வாது செய்வன்இப் போது வள்ளலே
- வறிய னேன்என மதித்து நின்றிடேல்
- தாது செய்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- பேயும் அஞ்சுறும் பேதை யார்களைப்
- பேணும் இப்பெரும் பேய னேற்கொரு
- தாயும் அப்பனும் தமரும் நட்பும்ஆய்த்
- தண்அ ருட்கடல் தந்த வள்ளலே
- நீயும் நானும்ஓர் பாலும் நீருமாய்
- நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ
- சாயும் வன்பவம் தன்னை நீக்கிடும்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- பொய்யர் தம்மனம் புகுதல் இன்றெனப்
- புனித நு‘லெலாம் புகல்வ தாதலால்
- ஐய நின்திரு அருட்கி ரப்பஇங்
- கஞ்சி நின்றென்இவ் விஞ்சு வஞ்சனேன்
- மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே
- வித்தி லாதவான் விளைந்த இன்பமே
- தைய லார்இரு வோரும் மேவுதோள்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- மாலின் வாழ்க்கையின் மயங்கி நின்பதம்
- மறந்து ழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்
- பாலின் நீர்என நின்அ டிக்கணே
- பற்றி வாழ்ந்திடப் பண்ணு வாய்கொலோ
- சேலின் வாட்கணார் தீய மாயையில்
- தியங்கி நின்றிடச் செய்கு வாய்கொலோ
- சால நின்உளம் தான்எவ் வண்ணமோ
- சாற்றி டாய்திருத் தணிகை நாதனே.
- 6. போரி-திருப்போரூர்