- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று
- திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே
- ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி
- ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு
- மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து
- வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி
- நன்று வேண்டிய யாவையும் வாங்கி
- நல்கு வேன்எனை நம்புதி மிகவே.
- தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
- சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
- யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
- யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
- மாது வேண்டிய நடனநா யகனார்
- வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
- ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
- ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே.
- இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால்
- இரத்தல் ஈதலாம் எனல்உணர்ந் திலையோ
- கரக்கின் றோர்களைக் கனவினும் நினையேல்
- கருதி வந்தவர் கடியவர் எனினும்
- புரக்கின் றோர்மலர்ப் புரிசடை உடையார்
- பூத நாயகர் பொன்மலைச் சிலையார்
- உரக்குன் றோர்திரு வொற்றியூர்க் கேகி
- உன்னி ஏற்குதும் உறுதிஎன் நெஞ்சே.
- கல்லின் நெஞ்சர்பால் கலங்கல்என் நெஞ்சே
- கருதி வேண்டிய தியாதது கேண்மோ
- சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான்
- சோலைசூழ் ஒற்றித் தொன்னகர்ப் பெருமான்
- அல்லின் ஓங்கிய கண்டத்தெம் பெருமான்
- அயனும் மாலும்நின் றறிவரும் பெருமான்
- வல்லை ஈகுவான் ஈகுவ தெல்லாம்
- வாங்கி ஈகுவேன் வருதிஎன் னுடனே.
- இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
- என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
- பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
- பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
- நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
- குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
- கொடுப்பர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே.
- மன்னு ருத்திரர் வாழ்வைவேண் டினையோ
- மால வன்பெறும் வாழ்வுவேண் டினையோ
- அன்ன ஊர்திபோல் ஆகவேண் டினையோ
- அமையும் இந்திரன் ஆகவேண் டினையோ
- என்ன வேண்டினும் தடையிலை நெஞ்சே
- இன்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே
- வன்னி அஞ்சடை எம்பிரான் ஒற்றி
- வளங்கொள் ஊரிடை வருதிஎன் னுடனே.
- மறப்பி லாச்சிவ யோகம்வேண் டுகினும்
- வழுத்த ரும்பெரு வாழ்வுவேண் டுகினும்
- இறப்பி லாதின்னும் இருக்கவேண் டுகினும்
- யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே
- பிறப்பி லான்எங்கள் பரசிவ பெருமான்
- பித்தன் என்றுநீ பெயர்ந்திடல் நெஞ்சே
- வறப்பி லான்அருட் கடல்அவன் அமர்ந்து
- வாழும் ஒற்றியின் வருதிஎன் னுடனே.
- காலம் செல்கின்ற தறிந்திலை போலும்
- காலன் வந்திடில் காரியம் இலைகாண்
- நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில்
- நிமிர்ந்த வெண்நெருப் பேந்திய நிமலர்
- ஏலம் செல்கின்ற குழலிஓர் புடையார்
- இருக்கும் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- ஞாலம் செல்கின்ற துயர்கெட வரங்கள்
- நல்கு வார்அவை நல்குவன் உனக்கே.
- சென்று நீபுகும் வழியெலாம் உன்னைத்
- தேட என்வசம் அல்லஎன் நெஞ்சே
- இன்ற ரைக்கணம் எங்கும்நேர்ந் தோடா
- தியல்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- அன்று வானவர் உயிர்பெற நஞ்சம்
- அருந்தி நின்றஎம் அண்ணலார் இடத்தே
- நின்று வேண்டிய யாவையும் உனக்கு
- நிகழ வாங்கிநான் ஈகுவன் அன்றே.
- கெடுக்கும் வண்ணமே பலர்உனக் குறுதி
- கிளத்து வார்அவர் கெடுமொழி கேளேல்
- அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனைநீ
- அம்மை இம்மையும் அகன்றிடா மையினால்
- தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித்
- தலத்தி னுக்கின்றென் றன்னுடன் வருதி
- மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம்
- வாங்கி ஈகுவன் வாழ்திஎன் நெஞ்சே.
- 23. ஈண்டு மேற்கொண்ட குறட்பா.இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு. 1054 (106 - இரவு - 4)