- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்
- கங்கை நாயகர் மங்கைபங் குடையார்
- பண்கள் நீடிய பாடலார் மன்றில்
- பாத நீடிய பங்கயப் பதத்தார்
- ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
- யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்
- மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கரிய மாலன்று கரியமா வாகிக்
- கலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்
- பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்
- பித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்
- உரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்
- உம்பர் நாயகர் தம்புயம் புனைய
- வரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- திருவின் நாயகன் கைப்படை பெறுவான்
- திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
- கருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்
- காத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்
- உருவின் நின்றவர் அருஎன நின்றோர்
- ஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு
- மருவின் நின்றநன் மணங்கொளும் மலர்ப்பூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்
- கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்
- துரும்பை நாட்டிஓர் விஞ்சையன் போலத்
- தோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோன்
- தரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்
- தலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து
- வரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- வதன நான்குடை மலரவன் சிரத்தை
- வாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான்
- நிதன24 நெஞ்சகர்க் கருள்தரும் கருணா
- நிதிய மாகிய நின்மலப் பெருமான்
- சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித்
- தூய னால்அவர் துணைத்திருத் தோட்கு
- மதன இன்தமிழ் மாலையோ டணுபூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
- காலில் போந்துமுன் காணரு முடியார்
- அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
- அம்மை காணநின் றாடிய பதத்தார்
- செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
- தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
- மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
- மறாது நீஉடன் வருதிஎன் மனனே.
- சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
- தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
- போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
- பூத நாதர்நற் பூரணா னந்தர்
- தாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
- தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
- வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
- மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.
- விதியும் மாலுமுன் வேறுரு எடுத்து
- மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
- நதியும் கொன்றையும் நாகமும் பிறையும்
- நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்
- பதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்
- பணைகொள் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்
- வதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- குளங்கொள் கண்ணினார் குற்றமே செயினும்
- குணமென் றேஅதைக் கொண்டருள் புரிவோர்
- உளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்
- ஒற்றி யூரிடம் பற்றிய புனிதர்
- களங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர்
- கல்லை வில்எனக் கண்டவர் அவர்தம்
- வளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- பணிகொள் மார்பினர் பாகன மொழியாள்
- பாகர் காலனைப் பாற்றிய பதத்தார்
- திணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்
- தேவர் நாயகர் திங்களம் சடையார்
- அணிகொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர்
- அழகர் அங்கவர் அமைந்துவீற்றிருக்கும்
- மணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- 24. நிதன - உருகுகின்ற ச.மு.க.பற்றின் திறம் பகர்தல்