- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- நாளை ஏகியே வணங்குதும் எனத்தினம் நாளையே கழிக்கின்றோம்
- ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன்
- தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர்உடல் தணந்திடல் தனைஇந்த
- வேளை என்றறி வுற்றிலம் என்செய்வோம் விளம்பரும் விடையோமே.
- விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்
- கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
- விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
- தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.
- பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
- ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
- அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
- தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.
- மலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றா
- தலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்
- நிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே
- தலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே.
- பதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய
- கதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே
- விதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
- வதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே.
- வாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம் வழுத்திடா துலகத்தே
- தாழும் வஞ்சர்பால் தாழும்என் தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய
- ஏழும் என்னதே ஆகிய தையனே எவர்எனைப் பொருகின்றோர்
- ஊழும் நீக்குறும் தணிகைஎம் அண்ணலே உயர்திரு வருள்தேனே.
- தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
- யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
- வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
- கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.
- குன்று பொய்உடல் வாழ்வினை மெய்எனக் குறித்திவண் அலைகின்றேன்
- இன்று நின்திரு வருள்அடைந் துய்வனோ இல்லைஇவ் வுலகத்தே
- என்றும் இப்படிப் பிறந்திறந் துழல்வனோ யாதும்இங் கறிகில்லேன்
- நன்று நின்திருச் சித்தம்என் பாக்கியம் நல்தணி கையில்தேவே.
- தேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
- மூவ ரும்பணி முதல்வநின் அடியில்என் முடிஉற வைப்பாயேல்
- ஏவ ரும்எனக் கெதிர்இலை முத்திவீ டென்னுடை யதுகண்டாய்
- தாவ ரும்பொழில் தணிகையம் கடவுளே சரவண பவகோவே.
- வேயை வென்றதோள் பாவையர் படுகுழி விழுந்தலைந் திடும்இந்த
- நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாதநின் செயல்அன்றே
- தாயை அப்பனைத் தமரினை விட்டுனைச் சார்ந்தவர்க் கருள்கின்றோய்
- மாயை நீக்குநல் அருள்புரி தணிகைய வந்தருள் இந்நாளே.