- திருவொற்றியூரும் திருத்தில்லையும்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- நீல னேன்கொடும் பொய்யல துரையா
- நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண்
- சால ஆயினும் நின்கழல் அடிக்கே
- சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ
- ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
- அகில கோடியும் அழிந்திடும் அன்றே
- சீல மேவிய ஒற்றியம் பரனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- கண்ணுன் மாமணி யேஅருட் கரும்பே
- கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே
- எண்ணுள் உட்படா இன்பமே என்றென்
- றெந்தை நின்றனை ஏத்திலன் எனினும்
- மண்ணுள் மற்றியான் வழிவழி அடியேன்
- மாய மன்றிதுன் மனம்அறிந் ததுவே
- திண்ணம் ஈந்தருள் ஒற்றியூர் அரசே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- நல்லன் அல்லனான் ஆயினும் சிறியேன்
- நான்அ றிந்ததோ நாடறிந் ததுகாண்
- சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ
- தொழும்பு கொண்டிடில் துய்யனும் ஆவேன்
- வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே
- மயங்கு கின்றதியான் வாடுகின் றனன்காண்
- செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- இரக்கம் என்பதென் னிடத்திலை எனநீ
- இகழ்தி யேல்அஃதி யல்புமற் றடியேன்
- பரக்க நின்அருட் கிரக்கமே அடைந்தேன்
- பார்த்தி லாய்கொலோ பார்த்தனை எனில்நீ
- கரப்ப துன்றனக் கழகன்று கண்டாய்
- காள கண்டனே கங்கைநா யகனே
- திரக்கண் நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத்
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- யாது நான்பிழை செய்யினும் பொறுப்பான்
- எந்தை எம்மிறை என்றுவந் தடைந்தேன்
- தீது நோக்கிநீ செயிர்த்திடில் அடியேன்
- செய்வ தென்னைநின் சித்தமிங் கறியேன்
- போது போகின்ற தன்றிஎன் மாயப்
- புணர்ச்சி யாதொன்றும் போகின்ற திலைகாண்
- சீத வார்பொழில் ஒற்றியம் பரனே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள்
- சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா
- நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை
- நாடி நல்லருள் நல்கிடா திருந்தால்
- ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ
- தென்கொ லாம்இந்த எண்ணம்என் மனத்தைத்
- தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- ஆட்டு கின்றநீ அறிந்திலை போலும்
- ஐவர் பக்கம்நான் ஆடுகின் றதனைக்
- காட்டு கின்றவான் கடலிடை எழுந்த
- காள முண்டஅக் கருணையை உலகில்
- நாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய
- நாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும்
- தீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை
- ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ
- செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே
- செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி
- மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை
- மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே
- செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- வாடு கின்றனன் என்றனை இன்னும்
- வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப்
- பாடு கின்றனன் பாவியேன் என்னைப்
- பாது காப்பதுன் பரம்அது கண்டாய்
- தேடு கின்றமால் நான்முகன் முதலாம்
- தேவர் யாவரும் தெரிவரும் பொருளே
- சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- சிறியர் செய்பிழை பெரியவர் பொறுக்கும்
- சீல மென்பதுன் திருமொழி அன்றே
- வறிய னேன்பிழை யாவையும் உனது
- மனத்தில் கொள்ளுதல் வழக்கல இனிநீ
- இறையும் தாழ்க்கலை அடியனேன் தன்னை
- ஏன்று கொண்டருள் ஈந்திடல் வேண்டும்
- செறிய ஓங்கிய ஒற்றியம் பரமே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.