- திருவொற்றியூர்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
- பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
- உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
- என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
- எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக்
- களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய் திலைஅருட் கரும்பே
- அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே அருமருந் தேவட வனத்துத்
- தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே தயையிலி போல்இருந் தனையே.
- இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என்துயர் அறிந்திலை போலும்
- முருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர் முலைத்தலை உருண்டன னேனும்
- மருந்தனை யாய்உன் திருவடி மலரை மறந்திலேன் வழுத்துகின் றனன்காண்
- வருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும்உண் டேயோ.
- உண்டநஞ் சின்னும் கண்டம்விட் டகலா துறைந்தது நாடொறும் அடியேன்
- கண்டனன் கருணைக் கடல்எனும் குறிப்பைக் கண்டுகண் டுளமது நெகவே
- விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன்நான் அன்றோ
- அண்டர்கட் கரசே அம்பலத் தமுதே அலைகின்றேன் அறிந்திருந் தனையே.
- தனையர்செய் பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் வழக்கல என்பார்
- வினையனேன் பிழையை வினையிலி நீதான் விவகரித் தெண்ணுதல் அழகோ
- உனையலா திறந்தும் பிறந்தும்இவ் வுலகில் உழன்றிடுந் தேவரை மதியேன்
- எனையலா துனக்கிங் காளிலை யோஉண்டென்னினும் ஏன்றுகொண் டருளே.
- ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள்
- ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால் உரைக்கும்மால் அயன்முதல் தேவர்
- நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல் நாஎழா துண்மையீ திதற்குச்
- சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள் சார்ந்தநின் சரண்இரண் டன்றே.
- சரணவா ரிசம்என் தலைமிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன்
- கரணவா தனையும் கந்தவா தனையும் கலங்கிடக் கபமிழுத் துந்தும்
- மரணவா தனைக்கென் செய்குவம் என்றே வருந்துகின் றனன்மனம் மாழாந்
- தரணமூன் றெரிய நகைத்தஎம் இறையே அடியனை ஆள்வதுன் கடனே.
- கடம்பொழி ஓங்கல் உரிஉடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே
- மடம்பொழி மனத்தேன் மலஞ்செறிந் தூறும் வாயில்ஓர் ஒன்பதில் வரும்இவ்
- உடம்பொழிந் திடுமேல் மீண்டுமீண் டெந்தஉடம்புகொண் டுழல்வனோஎன்று
- நடம்பொழி பதத்தாய் நடுங்குகின் றனன்காண் நான்செயும் வகைஎது நவிலே.
- வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்தெனை ஆளும்
- தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் சழக்குடைத் தமியன்நீ நின்ற
- திகைஎது என்றால் சொலஅறி யாது திகைத்திடும் சிறியனேன் தன்னைப்
- பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் பவளமா நிறத்தகற் பகமே.
- கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்விகற் றுழன்றனன் கருணை
- சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச் சூகரம் எனமலம் துய்த்தேன்
- விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகிலா வெறியேன்
- அற்பனேன் தன்னை ஆண்டநின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே.